அறத்துப்பால் - துறவறவியல் - வாய்மை

குறள் 291:
 
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
 
கலைஞர் உரை:
 
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.
 
மு.வ உரை:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
 
சாலமன் பாப்பையா உரை:
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
 
Translation:
 
You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.
 
Explanation:
 
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
 
குறள் 292:
 
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
 
கலைஞர் உரை:
 
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
 
மு.வ உரை:
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
 
சாலமன் பாப்பையா உரை:
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
 
Translation:
 
Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.
 
Explanation:
 
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
 
குறள் 293:
 
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
 
கலைஞர் உரை:
 
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
 
மு.வ உரை:
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
 
சாலமன் பாப்பையா உரை:
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
 
Translation:
 
Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows.
 
Explanation:
 
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
 
குறள் 294:
 
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
 
கலைஞர் உரை:
 
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
 
மு.வ உரை:
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
 
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.
 
Translation:
 
True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.
 
Explanation:
 
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
 
குறள் 295:
 
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
 
கலைஞர் உரை:
 
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.
 
மு.வ உரை:
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
 
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
 
Translation:
 
Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.
 
Explanation:
 
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
 
குறள் 296:
 
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
 
கலைஞர் உரை:
 
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.
 
மு.வ உரை:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
 
சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.
 
Translation:
 
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.
 
Explanation:
 
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.
 
குறள் 297:
 
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
 
கலைஞர் உரை:
 
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.
 
மு.வ உரை:
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
 
சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.
 
Translation:
 
If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.
 
Explanation:
 
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.
 
குறள் 298:
 
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
 
கலைஞர் உரை:
 
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.
 
மு.வ உரை:
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
 
சாலமன் பாப்பையா உரை:
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.
 
Translation:
 
Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.
 
Explanation:
 
Purity of body is produced by water and purity of mind by truthfulness.
 
குறள் 299:
 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
 
கலைஞர் உரை:
 
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
 
மு.வ உரை:
புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
 
சாலமன் பாப்பையா உரை:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
 
Translation:
 
Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright.
 
Explanation:
 
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
 
குறள் 300:
 
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
 
கலைஞர் உரை:
 
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.
 
மு.வ உரை:
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
 
சாலமன் பாப்பையா உரை:
சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.
 
Translation:
 
Of all good things we've scanned with studious care,
There's nought that can with truthfulness compare.
 
Explanation:
 
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.
 
 
 
 
 
 
திருக்குறள் அறத்துப்பால், குறள் 291-300, துறவறவியல், வாய்மை